Friday, December 5, 2008

தொப்பை

ஜோஸ் அன்றாயின்



உங்களுக்கு நான் சொல்ல போகிற விசயங்கள் பிடிக்காமல் போகலாம். இருந்தாலும் பரவாயில்லை. அது உங்களுடைய பிரச்சினை. சரி நான் சொல்ல வந்ததை சொல்கிறேன். நான் நல்ல வசீகரமானவன். அதே நேரம் அந்த வசீகரத்தை தக்க வைத்துக்கொள்வதற்கு நான் பெரிய பிரயத்தனங்கள் எதுவும் எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் அது எவ்வளவு தவறு என்பதை ஒரு நாள் உணர்ந்தேன். ஒரு நாள் அலுவலகத்திற்கு செல்வதற்காக பேண்டும், சட்டையும் போட்டுக்கொண்டு பெல்டை கட்டினேன். அது எவ்வாறு தோற்றமளிக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக குனிந்து பார்த்தேன். என்னால் நான் கட்டியிருந்த பெல்டை பார்க்க முடியவில்லை. நான் பார்க்க முடியாதவாறு என்னுடைய தொப்பை நான் கட்டியிருந்த பெல்டை மறைத்தது. அது என்னை எந்த அளவுக்கு அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

என்னுடைய கல்லூரி நாட்களில் மாணவர் அரசியலில் பங்குக்கொண்டு நான் பேசிய மேடை பேச்சுக்கள் எனக்கு ஞாபகத்திற்கு வந்தன. அப்போது நான், நாட்டில் சமதர்ம சமுதாயம் படைக்க வேண்டுமென்றால் முதலில் தொப்பைகளை ஒழிக்க வேண்டும். ஏனென்றால் தொப்பையானது ஊழல் பேர்வழிகள், சோம்பேறிகள், சமூகத்தைச் சுரண்டி வாழும் ஒட்டுண்ணிகள், மற்றும் இவர்களுக்கெல்லாம் கைக்கூலிகளாக விளங்கும் போலீசார் ஆகியோர்களின் முக்கிய அங்க அடையாளமாகும். ஆதலால் தொப்பைகளை ஒழிக்காமல் சமதர்ம சமுதாயம் அமைப்பதற்கு வாய்ப்பே இல்லை என முழங்கினேன். இப்போது என்னுடைய தொப்பை எனக்கு பூதாகரமாக தோன்றியது. நான் நொடிந்து போய் உட்கார்ந்துவிட்டேன். என் மனைவி என்ன ஆச்சு ஏதாவது பிரச்சினையா என வினவினாள். நான் ஒன்றுமில்லை என்று சொல்லி மழுப்பிவிட்டேன். ஆனால் தொடர்ந்து இந்த தொப்பை பிரச்சினை என்னை மிகவும் வாட்டிக் கொண்டிருந்தது. இரண்டு மூன்று நாட்களாக என்னால் எந்த வேலையும் செய்யமுடியாமல் போனது. ஒரு வழியாக தினமும் ஓடுவதுதான் தொப்பையை குறைப்பதற்கான எளிய வழி என்பதை என்னுடைய நண்பர் ஒருவரிடமிருந்து அறிந்துக்கொண்டேன்.

தினமும் ஓடுவது என்று தீர்மானம் எடுத்தாலும், அதை செயல்படுத்துவது எனக்கு மிகவும் வேதனை தரும் விசயமாகிவிட்டது. நான் ஓட ஆரம்பித்தால் இந்த சமூகத்திலுள்ளோர் அனைவருக்கும் எனக்குத் தொப்பை இருப்பதை பகிரங்கபடுத்துவது போல் ஆகிவிடும். பிறகு அவர்கள் எல்லோரும் என்னை ஒரு ஒட்டுண்ணியாகத்தான் பார்ப்பார்கள். நான் ஒடாமல் விட்டுவிட்டால், இந்த தொப்பைப் பெரிதாகி, என் வீட்டு வாசலையும், அலுவலகத்தின் வாசலையும் பெரிதாக்க வேண்டிய கட்டாயத்திற்கு இட்டுச் சென்றுவிடும். அது இதைவிட அவமானகரமான விசயமாகிவிடும். அதனால் எனக்கு தினமும் ஓடுவதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லாமல் போனது. அரைகுறை மனதுடன் காலையில் எழுந்து ஓட ஆரம்பித்தேன். அப்பொழுதுதான் தெரிந்தது, நான் தனியனல்ல என்று. அந்த காலை வேளையில் அந்த நிழற் சாலையானது மனிதர்கள் யாரும் இல்லாமல் வெறும் தொப்பைகளால் நிறைந்திருந்தது. அந்த சாலை என்ன, நகரம் முழுவதுமே தொப்பைகளால்தான் நிறைந்திருந்தது. எங்கும் நிறைந்திருக்கும் இந்த தொப்பைகள் மக்களை சேரிகளுக்கும், புறநகர் பகுதிகளுக்கும் விரட்டியடித்துவிட்டது போல தோன்றியது. ‘எப்படி இந்தத் தொப்பைகளால் மக்கள் எல்லோரையும் துரத்திவிட முடிந்தது?’ என மனதில் அசை போட்டவண்ணம் ஓடிக்கொண்டிருக்கும் போது, எல்லொரும் விரட்டியடிக்கப்படவில்லை என்பதை ஊர்ஜிதம் பண்ணுவது போல் எங்கள் பகுதிக்குப் பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்யும் கிழவித் தன்னுடைய தள்ளுவண்டியைத் தள்ளி வந்துகொண்டிருந்தாள். வெயிலானாலும், மழையானாலும், இவள் தன்னுடைய தள்ளுவண்டியில் பால் பாக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவாள். மழைக்காலங்களில் சூரியன் காணாமல் போய்விடுவதுண்டு. ஆனால் இவளோ எங்கள் பகுதியெங்கும் தன்னுடைய தள்ளுவண்டியுடன் நிறைந்திருப்பாள். நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கடந்து செல்லும் போது, ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். அவள் முகத்தில் புன்னகை பூத்தது. அவள் என்னுடையத் தொப்பையைக் குறைக்கும் முயற்சியை தன்னுடைய புன்னகையின் மூலம் ஆமோதிப்பது போல் தோன்றியது.

முதல் நாள் என்னால் நீண்ட தூரம் ஓட முடியவில்லை. கால்கள் வலிக்க ஆரம்பிக்க ஓடுவதை நிறுத்தி, ஓடிக்கொண்டிருக்கும் மற்ற தொப்பைகளை அவதானித்தேன். அந்தத் தொப்பைகள் தொடர்ந்து ஓடுவதற்கு அணிந்திருக்கும் விலையுயர்ந்த காலணிகள்தான் காரணம் என்பதை என்னால் உணரமுடிந்தது. நான் அணிந்திருக்கும் காலணிகளைப் பார்த்தேன். எனக்கே என்னைப் பற்றியக் கழிவிரக்கம் உண்டாயிற்று. நான் இப்படிப்பட்ட சாதாரண காலணிகள் அணிந்திருப்பதை மற்ற தொப்பைகள் பார்த்து நகைப்பது போல் எனக்கு தோன்றின. நான் நல்ல சம்பளம் வாங்கும் தலைமை மென்பொறியாளர் என்பதால் காசு என்பது எனக்கு ஒரு பிரச்சினையாக எப்போதும் இருந்ததில்லை. அதனால் அன்றைக்கே கடைக்கு சென்று விலையுயர்ந்த காலணிகளை வாங்கினேன்.

நல்ல காலணிகள் அணிந்திருந்ததனால் மறுநாள் ஓடும் போது எனக்கு கால்கள் வலிக்கவில்லை. அதனால் நான் நீண்ட தூரம் ஓடினேன். ஓடிய ஓட்டத்தில் என் உடம்பெங்கும் வியர்வை வழிந்தோடி ஆடைகளையெல்லாம் நனைத்துவிட்டது. அப்போது அந்த பால்கார கிழவி தன்னுடைய தள்ளுவண்டியுடன் எதிர் திசையிலிருந்து வெளிப்பட்டாள். அவள் என் காலணிகளையும், வியர்வையில் உடலுடன் ஒட்டிப்போன ஆடைகளையும் பார்த்தாள். பின் என்னைப் பார்த்து புன்னகைத்தாள். நான் இனிமேல் சமூகத்தின் ஒட்டுண்ணியல்ல என்று அவள் எனக்கு அங்கீகாரம் வழங்குவது போல் தோன்றியது. அந்த அங்கீகாரம் கிடைத்த உற்சாகத்தில் நான் இன்னும் வேகமாக ஓடினேன். ஆனால் திடீரென்று ஏதோ இனம் புரியாத உணர்வு என்னை மின்னல் போல் தாக்கியது. ஓடுவதை உடனே நிறுத்திவிட்டேன். அந்தக் கிழவி மோசமானவள். சூது நிறைந்த சூனியக்காரி. அவள் என்னைப் பார்த்து புன்னகைக்கவில்லை. மாறாக ஏளனமாக சிரித்திருக்கிறாள். நான் என் மனைவிக்கு தண்ணீர் எடுத்துக் கொடுப்பது போன்ற சிறு உதவிகளையும் செய்யாதிருப்பது, பிஸ்கட் வாங்கப் போனால் கூட காரில் போவது, வெயிலில் காலணிகள் இல்லாமல் நடந்துபோன சிறுமிக்கு எந்த உதவியும் செய்ய முன்வராதது போன்ற விசயங்கள் எல்லாம் இவளுக்கு எப்படித் தெரிந்தது? எது எப்படியிருந்தாலும் இவ்வளவு தொப்பைகள் இருக்க கிழவி என்னை மட்டும் குறி வைத்து கேலிக்கணைகளால் துன்புறுத்துவது சரியல்ல. எனக்கு வந்த கோபத்தில் அவளை கொலை செய்துவிடலாமா என யோசித்தேன். ஆனால் அது முடியாதக் காரியம். ஏனென்றால் அவள் சமூகத்தின் மனசாட்சியாகவும், நீதிபதியாகவும் வலம் வந்துகொண்டிருந்தாள். என்னால் அவளுக்கு சிறு காயம் ஏற்பட்டால் கூட ஒட்டுமொத்த சமூகமும் சேர்ந்து என்னை தூக்கிலிட்டுவிடும். என்ன செய்வதென்று தெரியாமல் திணறிப்போனேன். குனிந்து என் காலணிகளைப் பார்த்தேன். கிழவியின் ஏளனச் சிரிப்பு அந்தக் காலணிகளில் ஒட்டுக்கொண்டிருந்தது. இப்போது அந்தக் காலணிகளும் என்னைப் பார்த்து ஏளனத்துடன் சிரித்தன. என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அந்த காலணிகளைக் கழற்றி துண்டு துண்டாக கிழித்து குப்பைத்தொட்டியில் போட்டேன். இனி ஓடுவதை விட்டுவிட்டு, வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி புரிவது, அலுவலகத்திற்கு காரில் போகாமல் சைக்கிளில் செல்வது, அக்கம் பக்கத்து சிறுவர்களுடன் கபடி விளையாடுவது போன்றவற்றின் மூலமே தொப்பையைக் குறைக்க வேண்டும் என உறுதி எடுத்துக்கொண்டேன்.

மறுநாளிலிருந்து என் மனைவிக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்ய ஆரம்பித்தேன். கீழ் தளத்திலிருந்து குடங்களில் தண்ணீர் எடுத்துக் கொடுத்தேன். பாத்திரங்களை கழுவிச் சுத்தப்படுத்தினேன். துணிகளை துவைத்து உலர வைத்தேன். இந்த வேலைகளை எல்லாம் செய்ய ஆரம்பித்த பிறகுதான் எனக்குத் தெரிந்தது வீட்டு வேலை எவ்வளவு சிரமமானது என்று. இதுநாள் வரையிலும் என்னுடைய மனைவிக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்யாமல் இருந்தது எனக்கு பெரும் வருத்தத்தை அளித்தது. அதனால் அதையெல்லாம் நிவர்த்தி செய்யும் வண்ணம் நானே எல்லா வேலைகளையும் இழுத்து போட்டுக்கொண்டு செய்ய ஆரம்பித்தேன். என் மனைவி என்னை பாராட்டுவாள் எனும் சிறு எதிர்பார்ப்பு எனக்குள் இருந்ததுதான். ஆனால் அவள் எந்த உணர்ச்சியையும் வெளிகாட்டிக் கொள்ளவில்லை. என்னால் அதை புரிந்துக்கொள்ள முடிந்தது. பாராட்டப்படுவதற்கு அவள் செய்யாத வேலையை ஒன்றும் நான் செய்துவிடவில்லை. அதனால் பாராட்டை எதிர்பார்ப்பது அபத்தமானது என்றுணர்ந்தேன். ஆனால் சில தினங்களில் அவள் என்னுடன் பேசுவதை குறைத்து முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டாள். ஏன் அவள் இவ்வாறு நடந்துக்கொள்கிறாள் என்பதை என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. அதைப் பற்றி அவளிடம் கேட்கலாம் என்றிருக்கும் போது அவளே வந்து ‘எனக்கு உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும்’ என்றாள். நான் ‘என்ன விசயம்? சொல்’ என்றேன். அவள் ஏதோ சொல்ல வாயெடுத்தாள், பின்னர் எதுவும் சொல்லாமல் அழ ஆரம்பித்துவிட்டாள். நான் பதறி போய் ‘ஏய் என்ன விசயம்? சொல்லு’ என்று அவளை பிடித்து உலுக்கினேன். அதற்கு அவள் ‘அப்பாவி மாதிரி நடிக்காதீர்கள். எனக்குத் தெரியும் நீங்க எவளோ ஒருத்தியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருக்கிறீர்கள் என்று.’ என்றாள். எனக்கு தூக்கிவாரி போட்டது. நான் அதிர்ச்சியுடன் ‘நீ எதை வைத்து நான் கள்ளத்தொடர்பு வைத்திருக்கிறேன் என்கிறாய்?’ என்றேன். அவள் “முதலில் இரண்டு நாள்கள் இடிந்து போய் உட்கார்ந்திருந்தீர்கள். அப்புறம் உடம்பை கச்சிதமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஓட ஆரம்பித்தீர்கள். இப்போது என்னவென்றால் என்னை ‘ஐஸ்’ வைப்பதற்காக விழுந்தடித்து வீட்டு வேலைகளை செய்கிறீர்கள். கள்ளத்தொடர்பு இல்லாமல் இருந்தால் நீங்கள் ஏன் இப்படி நடந்துகொள்ள வேண்டும்” என்றாள். நான் கலக்கத்துடன் ‘அப்படியெல்லாம் இல்லையம்மா. இதுநாள் வரை உன் மேல் எனக்குள்ள காதலை உணர முடியாதவாறு என்னுடைய தொப்பை என் அகக்கண்களை மறைத்துவிட்டது. இதை நம் பகுதிக்கு வரும் பால்கார கிழவிதான் எனக்கு புரிய வைத்தாள்.’ என்று கூறி, எவ்வாறு அந்த கிழவி என்னுடைய வாழ்க்கை முறையைத் தெரிந்து வைத்துக்கொண்டுத் தன்னுடைய கேலி கணைகளால் என்னுடையத் தவறுகளை உணர வைத்தாள் என விளக்கினேன்.

உண்மையை உணர்ந்து கொண்டதும் என் மனைவி சாந்தமடைந்தாள். எது எப்படியிருந்தாலும் அலுவலகத்திற்கு சைக்கிளில் செல்லுவது, அக்கம்பக்கத்திலுள்ள சிறுவர்களுடன் கபடி விளையாடுவது போன்ற என்னுடைய எண்ணங்களை கைவிட்டுவிட்டேன். ஏனென்றால் என்னுடைய மனைவி நான் ஒரு சைக்கிள் திருடன் எனவும், என்னுடன் விளையாடும் சிறுவர்கள் எனக்கு பிறந்த குழந்தைகள் எனவும் தவறாக நினைத்து விவாகரத்து கோர வாய்ப்பிருப்பதை என்னால் உணர முடிந்தது. அதனால் நான் வீட்டுவேலைகளை மட்டும் ஒழுங்காக செய்வது என தீர்மானித்தேன்.

எங்கள் இருவருக்கும் இடையிலுள்ள உறவு பலப்படுவதற்கு காரணமாக அமைந்ததால் என் மனைவி அந்த பால்கார கிழவியை தலையில் வைத்துக் கொண்டாடினாள். அவளை வீட்டுக்கு அழைத்து விருந்து படைத்தாள். ‘எங்கள் குடும்ப வாழ்க்கையை மேன்மையடையச் செய்ய வந்த தேவதை நீங்கள்.’ என்று அவளிடம் கூறினாள். உண்மையிலேயே கிழவி ஒரு அற்புதமான பிறவிதான். அல்லாவிடில் என் தனிப்பட்ட வாழ்க்கையை அவளால் இவ்வளவு துல்லியமாக தெரிந்து வைத்திருக்க முடியாது. நான் அவளிடம் ‘எப்படி உங்களால் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையைத் துல்லியமாக அறிந்துக்கொள்ள முடிந்தது?’ என்று கேட்டேன். கிழவி பயந்துவிட்டாள். ‘எனக்கு உண்மையிலேயே உங்களைப் பற்றி ஒன்றும் தெரியாது.’ என்று அவள் சத்தியம் செய்தாள். கிழவியின் பயத்தை என்னால் உணர முடிந்தது. ஒருவேளை உண்மையை அறிந்துகொண்டால் நான் அவளை ரவுடிகளை வைத்து கொலைச் செய்துவிடுவேன் என அவள் பயந்திருக்க கூடும். ஆனால் எனக்கு அந்த மாதிரி எந்த எண்ணமும் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். உண்மையில் நான் கிழவியை எப்போதோ மன்னித்துவிட்டேன். என் மனைவி எரிச்சலுடன் ‘ஏன் தேவையில்லாத கேள்விகளை விருந்துக்கு வந்திருப்பவரிடம் கேட்கிறீர்கள்?’ என்றாள். தேவையில்லாமல் கிழவியை பயமுறுத்தியிருக்க கூடாதுதான். கிழவியின் பயத்தை போக்கும் எண்ணத்துடன் நான் அவளை பார்த்து ‘எப்படி இந்த வயதிலும் உங்களால் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க முடிகிறது?’ என்று கேட்டேன். அவள் ‘நான் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து ஒரு நாள் கூட வேலை செய்யாமல் இருந்ததில்லை. அதனால்தான் நான் எப்போதும் ஆரோக்கியத்துடன் இருக்கிறேன்’ என்று பெருமிதத்துடன் கூறினாள். அவள் கூறியது முற்றிலும் உண்மை. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அவள் எங்கள் பகுதிக்கு தள்ளுவண்டியில் பால் விநியோகம் செய்து வந்தாள்.

நான் என் மனைவியை மிகவும் நேசிப்பவன் என்பதால் அவளும் நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என விரும்பினேன். அதனால் அவளுடைய பிறந்த நாளுக்கு நான் பால் விற்க கூடிய ஒரு தள்ளுவண்டியை பரிசாக அளிக்க தீர்மானித்தேன். இந்த பரிசின் மூலம் அவள் என்னுடையக் காதலின் தீவிரத்தை புரிந்துக்கொள்வாள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இருக்கவில்லை. பிறந்தநாளன்று உறவினர்களும், நண்பர்களும் சூழ்ந்திருக்க நான் பெருமிதத்துடன் என் மனைவிக்கு ஒரு தள்ளுவண்டியை பரிசாக அளித்தேன். நான், அவள் என்னுடைய காதல் பரிசை பார்த்து சந்தோசப்படுவாள் என நினைத்தேன். ஆனாள் அவள் முகம் அவமானத்தால் கறுத்து போய்விட்டது. அழுத வண்ணம் ‘நீங்கள் என்னை அவமானபடுத்திவிட்டீர்கள்’ என்று கத்தினாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ‘உன்னை அவமானபடுத்தும்படி நான் என்ன செய்துவிட்டேன்?’ என அவளை பார்த்து குழப்பத்துடன் கேட்டேன். அவள் அந்த தள்ளுவண்டியை சுட்டிக்காட்டி ‘என்ன இது?’ என்றாள். நான் ‘நீ நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும் என்பதற்காக நான் கொடுக்கும் காதல் பரிசு.’ என்றேன். அதற்கு அவள் ‘எனக்கு உங்கள் காதல் பரிசு தேவையில்லை. நான் உங்களை காதலிக்கவும் இல்லை.’ என்று கத்தினாள். நான் அவளை பார்த்து ‘ஏன்?’ என்றேன். அவள் ‘ஏனென்றால் உங்களுக்கு கணினியுடன் வேலை செய்து, செய்து மூளை தொப்பை வந்துவிட்டது.’ என்றாள். எனக்கு என் தவறு புரிய ஆரம்பித்தது. என் மனைவியினுடைய பிறந்தநாளுக்கு அவளுக்கு பிடித்தவற்றை மட்டுமே செய்வது சரியான செயலாக இருந்திருக்கும். ஆனால் நான் அவளுடைய விருப்பம் என்னவென்று கேட்காமல் பிறந்தநாள் பரிசை வாங்கிவிட்டேன். அது மிகப்பெரும் தவறுதான். நான் ஒரு குற்றவாளி போல் கூனி குறுகி போனேன். இதற்கு எல்லாம் காரணம் எனக்கு மூளை தொப்பை இருப்பதுதான். இந்த மூளை தொப்பையை போக்காவிடில் அவளுடைய காதலை என்னால் மீண்டும் பெற முடியாது என்பதை என்னால் உணரமுடிந்தது. அதனால் மூளை தொப்பையை குறைப்பதற்கு என்ன வழி என்று ஆராய ஆரம்பித்தேன்.

மூளைத் தொப்பை வருவதற்கு முதல் காரணம் என் மனைவி கூறியது போல் கணினியுடன் ஒன்றி போய்விடுவதுதான். இரண்டவது காரணம் என்று நான் உணர்ந்தது வயிற்று தொப்பை. எனவே முதலில் நான் கணினியுடன் ஒன்றி போவதை தவிர்க்க வேண்டும். பின்னர் வயிற்று தொப்பையை போக்கும் பொருட்டு உடலுழைப்பில் ஈடுபடுவதுடன், சமூகத்தின் மற்ற அங்கத்தினருடன் என்னை பிணைக்கும் செயல்களிலும் ஈடுபடவேண்டும். இவ்வாறு நான் செயல்பட்டால்தான் வயிற்று தொப்பையை போக்கி மூளை தொப்பையிலிருந்து விடுபட முடியும்.

மூளைத் தொப்பையை போக்க வேண்டும் என உறுதிபூண்ட நான் மறுநாள் அலுவலகத்திற்கு சென்றதும் எனக்கு கீழ் வேலை செய்யும் எல்லா மென்பொறியாளர்களுக்கும் அவரவர்கள் செய்ய வேண்டிய வேலையை கொடுத்து அந்த வேலைகளை செய்து முடிப்பதற்கான வழிமுறைகளைத் தெளிவாக விளக்கினேன். பின் அந்த மென்பொருள் கம்பெனி முதலாளிக்கு என்னுடைய பணிவிலகல் கடிதத்தை மின்னஞ்சல் மூலம் அனுப்பிவிட்டு அலுவலகத்தை விட்டு வெளியேறினேன்.

கணினியிடமிருந்து விடுபட்டால் மட்டும் போதாது. தொப்பையை குறைக்க வேண்டுமென்றால் உடனடியாக உடலுழைப்பில் ஈடுபட்டாக வேண்டும். என்ன வேலை செய்யலாம் என்று யோசித்த போது தள்ளுவண்டியில் பால் வியாபாரம் செய்வது சரியாக இருக்கும் எனத் தோன்றியது. ஆனால் நான் பால்கார கிழவிக்கு போட்டியாக இருப்பதை என் மனைவி விரும்புவாளா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. ஏனென்றால் என் மனைவி நான் அவளுக்கு பிறந்தநாள் பரிசாக வாங்கிகொடுத்த பால் விற்கும் தள்ளுவண்டியை ஏற்றுக்கொள்ளாததன் காரணம் அவள் மிகவும் நேசிக்கும் பால்கார கிழவிக்கு தான் ஒரு போட்டியாக இருக்க விரும்பாததுவாகத்தான் இருக்கும் என எனக்குப் பட்டது. அதனால் பால் வியாபாரம் செய்யும் எண்ணத்தை கைவிட்டு தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்வது என முடிவெடுத்தேன். உடனடியாக ஒரு தள்ளுவண்டியை ஏற்பாடு செய்து காய்கறி வியாபாரத்தை ஆரம்பித்துவிட்டேன். தெருக்கள் வழியாக ‘லேடிஸ் அண்ட் ஜென்டில்மென், தக்காளி, வெங்காயம், லேடிஸ் பிங்கர்...’ என்று சத்தமாக கூவிக்கொண்டு சென்றேன். வியாபாரம் நன்றாகத்தான் நடந்தது. முப்பது ரூபாய் லாபம் கிடைத்தது. வியாபாரத்தில் முன்பின் பழக்கமில்லாத எனக்கு முதல் நாளே அவ்வளவு லாபம் கிடைத்தது மிகுந்த சந்தோசத்தை அளித்தது. அதனால் உற்சாகத்துடன் தள்ளுவண்டியுடன் வீடு திரும்பினேன்.

வீட்டை நெருங்கும் போது நான் வேலை செய்த கம்பெனி முதலாளி மகளின் கார் வீட்டுக்கு அருகில் நிற்பதைப் பார்த்தேன். அவள் எதற்காக என்னை தேடி வந்தாள் என எனக்குத் தெரியவில்லை. என்ன விசயமாக இருக்கும் என்று யோசித்த வன்ணம் வீட்டிற்குள் நுழைந்த போது முதலாளியின் மகள் என் மனைவியுடன் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டேன். அவள் என்னைப் பார்த்ததும், ‘ஏன் இப்படி திடீரென்று வேலையிலிருந்து நின்றுவிட்டீர்கள்? சம்பளம் குறைவென்று எண்ணினால் நீங்கள் அதைப்பற்றி நேரடியாகவே பேசியிருக்கலாமே!’ என்றாள். நான் பதில் சொல்ல வாயெடுத்தேன். ஆனால் அவள் நான் பேசுவதை சட்டை செய்யாமலேயே தொடர்ந்து ‘உங்களுக்கு அறுபது சதவிகிதம் சம்பள உயர்வு மற்றும் கம்பெனி செலவில் வருடத்தில் ஒரு மாதம் வெளிநாட்டில் குடும்பத்துடன் தங்கி ஓய்வெடுப்பதற்கான வசதி போன்ற ஏற்பாடுகளை செய்துள்ளோம்.’ என்றாள். நான் ‘நான் உடலுழைப்பில் மட்டும்தான் ஈடுபட போகிறேன். அதனால் கணினி சம்பந்தமான எந்த வேலைகளையும் நான் இனிமேல் செய்யப் போவதில்லை.’ எனத் திட்டவட்டமாக அவளிடம் தெரிவித்தேன். அவள் ‘கம்பெனிக்கு உங்களுடைய உதவி மிகவும் தேவைப்படுகிறது. அதனால் தயவு செய்து உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்.’ என்று வேண்டினாள். அவள் புரியாமல் இப்படி பேசியது எனக்கு பெரிய கோபத்தை ஏற்படுத்தியது. அதனால் ‘உங்கள் அப்பா போன்ற பாஸ்டர்ட்ஸ் எல்லாம் சேர்ந்து மனிதர்களை மூளைத் தொப்பையுள்ளவர்களாக மாற்றுகிறார்கள். அவர்கள் நடத்துவது மூளைத்தொப்பை உருவாக்கும் கம்பெனிகள் அல்லாது வேறொன்றுமில்லை. என்னைப் பொறுத்தவரை இவர்களெல்லாம் தண்டிக்கப்பட வேண்டிய சமூக விரோதிகள்.’ என்றுக் கத்தினேன். என் மனைவி அதிர்ச்சியுடன் ‘என்ன ஆச்சு உங்களுக்கு? ஏன் இந்த மாதிரி நடந்து கொள்கிறீர்கள்?’ என்று கேட்டாள். முதலாளியின் மகள் மீண்டும் ‘தயவு செய்து உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்.’ என்று வேண்டினாள். நான் ‘முடியவே முடியாது.’ என்று உறுதியாக கூறினேன். அந்நேரம் என் மனைவி என்னுடைய கையைப் பிடித்து பக்கத்து அறைக்கு அழைத்துச் சென்றாள். பின்னர் ‘ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்? இதைவிட நல்ல வேலை கிடைப்பது கடினம். அதுபோக உங்களுடைய உதவி அவர்களுக்கு மிகவும் தேவைப்படுவது போல தோன்றுகிறது. இக்கட்டான நிலையில் இப்படி வேலையை விடுவது சரியல்ல.’ என்று அழாத குறையாக கூறினாள். நான் ‘நீ நினைப்பது மாதிரி நான் ஒன்றும் அந்த அளவுக்கு கம்பெனிக்கு முக்கியமானவன் அல்ல. முதலாளியின் மகள் என்னுடன் கள்ளத் தொடர்பு வைத்துக்கொள்ள விரும்புகிறாள் போல தோன்றுகிறது. அதனால்தான் இவ்வளவு பிடிவாதமாக வேலைக்கு வர வேண்டும் எனக் கூறுகிறாள். எது எப்படியென்றாலும் நான் அங்கு வேலைக்கு சேரப்போவதில்லை. ஏனென்றால் நான் உடலுழைப்பின் மூலம் தொப்பையைக் குறைக்கப் போகிறேன்.’ என்றேன். என் மனைவி ‘கடவுளே... உங்களுக்கு என்ன ஆச்சு?’ என்ற வண்ணம் அழ ஆரம்பித்தாள். பின்னர் ‘நீங்கள் இந்த மாதிரி நடந்து கொண்டால் நான் என் அம்மா வீட்டிற்கு போய்விடுவேன்.’ என்றாள். நான் திடுக்கிட்டுப் போனேன். அந்தக் கம்பெனியில் வேலை செய்வதை விட்டு நின்ற காரணமே மூளைத் தொப்பையைக் குறைத்து என் மனைவியின் காதலை திரும்பப் பெறவேண்டும் எனும் எண்ணம்தான். இப்போது அவளே நான் அந்த கம்பெனிக்கு வேலைக்கு போகாவிட்டால் அம்மா வீட்டிற்கு போய்விடுவேன் என்று கூறியது எனக்கு அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. அவளில்லாமல் என்னால் வாழ முடியாதென்பது எனக்குத் தெரியும். அதனால் மீண்டும் கம்பெனியில் சேர்ந்து வேலை செய்வதாக அவளுக்கு உறுதியளித்தேன். பின்னர் முதலாளியின் மகள் அமர்ந்திருக்கும் அறைக்கு வந்து, ‘நான் மீண்டும் கம்பெனியில் சேர்ந்து வேலை செய்ய சம்மதிக்கிறேன். ஆனால் நான் கம்பெனிக் கட்டிடத்திலுள்ள எல்லாத் தளங்களுக்கும் தண்ணீர் இறைப்பது போன்ற உடலுழைப்பு சம்பந்தமான வேலைகளைத்தான் செய்வேன்.’ என்றேன். அதற்கு அவள் ‘அந்த வேலைகளுடன் கூடவே தங்கள் கீழ் வேலை செய்யும் மென்பொறியாளர்களுக்கு அவர்கள் வேலைகளிலுள்ள சந்தேகங்களை தீர்த்து அவர்களுக்கு வேண்டிய அறிவுரைகளை கொடுக்க முடியுமா?’ என்று கேட்டாள். இது ஒரு நல்ல சமரச முயற்சியாக எனக்கு தோன்றியது. அதனால், ‘சரி... நான் இதற்கு உடன்படுகிறேன்.’ என்றேன். அவள் ‘சரி’ என்று கூறி என்னிடமும் என் மனைவியிடமும் விடைபெற்றுக் கொண்டு வெளியேறினாள். நான் செய்த தியாகம் என் மனைவியை நெகிழ வைத்திருக்க வேண்டும். அவள் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

என் வேண்டுகோளுக்கு இணங்க கம்பெனிக் கட்டிடத்திலுள்ள எல்லாத் தளங்களுக்கும் செல்லும் தண்ணீர் குழாய் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. கட்டிடத்திலுள்ள ஆறு மாடிகளுக்கும் நான்தான் தண்ணீர் இறைப்பதென்று முடிவாகியிருந்தது. உடலுழைப்பிலுள்ள மகத்துவத்தைத் தெரிந்த நான் உற்சாகத்துடன் தண்ணீர் இறைக்க ஆரம்பித்துவிட்டேன். மிகவும் சிரத்தையுடன் எந்த தளங்களிலும் தண்ணீர் தட்டுபாடு ஏற்படாதவாறு பார்த்துக்கொண்டேன். நான் தண்ணீர் குடங்களை ஏந்தியவண்ணம் படிகளில் ஏறிக்கொண்டிருக்க எனக்கு கீழ் வேலை செய்யும் மென்பொறியாளர்கள் கைகளில் லேப்டாப் கம்ப்யூட்டகளுடன் என் பின்னே வந்து தங்கள் வேலைகளில் எழும் சந்தேகங்களை கேட்டனர். நான் படிகளில் ஏறிய வண்ணமே அவர்களுடைய சந்தேகளை தீர்த்து அவர்களுடைய வேலைகளை செம்மையாகச் செய்வதற்கான அறிவுரைகளையும் வழங்கினேன். வேலையில் களைப்பு ஏற்பட்டு ஓய்வெடுக்கும் நேரங்களில் அவர்களில் யார் யார் எந்த வேலைகளைச் செய்ய வேண்டும் என்பதை தீர்மானித்து, அவர்கள் அந்த வேலைகளை சிறப்புடன் செய்வதற்கான வழிமுறைகளையும் விளக்கினேன்.

மூளை தொப்பையை போக்குவதற்கு வெறும் உடலுழைப்பு மட்டும் போதாது. வெளி சமூகத்துடன் இணந்து வாழ்ந்து, சமூகத்தின் ஒரு முழு அங்கத்தினனாக மாறினால்தான் மூளைத் தொப்பையை குறைக்க முடியும். அப்படி சமூகத்தின் முழு அங்கத்தினனாக மாறுவதற்கான எளிமையான வழியாக எனக்குப் பட்டது எங்கள் கம்பெனியிலிருந்து சற்றுத்தொலைவிலுள்ள சேரியிலிருக்கும் சிறுவர்களுடன் மாலை நேரங்களில் கபடி விளையாடுவதுதான். ஆனால் நான் ஏற்கனவே கூறியதைப் போல என் மனைவிக்கு இது தெரிய வந்தால் பெரிய பிரச்சினையில் கொண்டுபோய் விட்டு விடும். அதனால் நான் சேரியிலுள்ள சிறுவர்களுடன் கபடி விளையாடும் விசயத்தை என்னுடைய மனைவியிடமிருந்து முற்றிலுமாக மறைத்துவிட்டேன்.

எங்களுடைய கடுமையான உழைப்பால் கம்பெனி அபரிதமான வளர்ச்சியை அடைந்தது. கம்பெனியை விரிவுபடுத்தும் முயற்சிகள் பலமாக நடந்து கொண்டிருந்தன. நாங்கள் பணிபுரியும் கட்டிடத்தின் அருகிலேயே கம்பெனிக்கான பனிரெண்டு மாடிக் கட்டிடம் ஒன்று எழும்பிக் கொண்டிருந்தது. ஒரு நாள் கம்பெனி முதலாளி என்னை அவருடைய அறைக்கு அழைத்து ‘நீங்கள் இல்லாமல் இந்தக் கம்பெனி இந்த அளவுக்கு வளர்ச்சியடைந்திருக்க முடியாது. உங்களை கௌரவப் படுத்துவதற்காக நீங்கள் விரும்பும் எதையும் நான் செய்யத் தயாராயிருக்கிறேன். உங்களுக்கு என்ன தேவையிருந்தாலும் தயங்காமல் என்னிடம் கூறுங்கள்.’ என்றார். நான் அவரைப் பார்த்து ‘தாங்கள் தற்பொழுது கட்டிக்கொண்டிருக்கும் புது கட்டிடத்திலுள்ள எல்லாத் தளங்களுக்கும் தண்ணீர் இறைக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தால் நான் மிகவும் சந்தோசமடைவேன்.’ என்றேன். அதற்கு அவர், ‘தங்கள் ஒருவரால் எப்படி அந்த வேலையைச் செய்ய முடியம்.’ என கேட்டார். நான், ‘எனக்கு கீழ் வேலை செய்யும் மென்பொறியாளர்களில் எண்பது பேர் மூளைத்தொப்பையைக் குறைக்கும் எண்ணத்துடன் தண்ணீர் இறைப்பில் எனக்கு உதவி செய்ய போவதாக உறுதியளித்துள்ளார்கள். அதனால் இந்த பொறுப்பை தாங்கள் எனக்குக் கொடுத்தால் கம்பெனி இன்னும் வேகமாக வளரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்’ என்று கூறினேன். அவர் மகிழ்ச்சியுடன் அதற்கு ஒத்துக்கொண்டார்.

தொடர்ந்து நான் செய்து வந்த உடலுழைப்பின் காரணமாக என்னுடைய வயிற்றுத் தொப்பை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டு வந்தது. இப்போது என் இடுப்பில் கட்டியிருக்கும் பெல்டை என்னால் பார்க்க முடிகிறது. இது உண்மையிலேயே எனக்குப் பெரும் சந்தோசத்தை அளித்ததுதான். ஆனால் எனக்கு மூளைத்தொப்பை குறைந்திருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. இந்த மூளைத்தொப்பை குறைந்தால்தான் என் மனைவியினுடைய காதலை என்னால் திரும்பப் பெறமுடியும். அதே நேரம் என் மனைவியினுடைய காதல் எனக்குத் திரும்பக் கிடைத்தால்தான் என் மூளைத்தொப்பை குறைந்திருக்கிறது என்று நான் அறிந்துக்கொள்ள முடியும். இதை என்னுடைய மனைவியிடம் கேட்பதற்கு பயமாக இருந்தது. ஏனென்றால் என் மனைவி எனக்கு மூளைத்தொப்பை குறையவில்லை என்று கூறி என்னைக் காதலிக்க முடியாது என்று மறுத்துவிட்டால் நான் நிலைகுலைந்து போவேன் என்பது எனக்குத் தெரியும். அதனால் எதுவென்றாலும் அவளாகவே கூறட்டும் என்று அது குறித்து அவளிடம் எதுவும் கேட்காமலேயே விட்டுவிட்டேன். அப்படியிருக்க ஒரு விடுமுறை நாளில் என் மனைவியினுடைய அம்மாவும் அப்பாவும் எங்கள் வீட்டிற்கு வருகை தந்தனர். அவர்களை நன்றாக உபசரிக்கும் எண்ணத்துடன் சந்தைக்குச் சென்று காய்கறிகளையும், பழங்களையும் வாங்கிக்கொண்டு வருவதற்காகப் புறப்பட்டேன். வீட்டை நெருங்கும் போது வீட்டினுள் என் மனைவிக்கும் அவளுடைய பெற்றோருக்கும் இடையே பயங்கர வாக்குவாதம் நடப்பதை என்னால் கேட்க முடிந்தது. அவளுடையத் தாய் ‘இந்தப் புத்தி பேதலித்தவனுடன் இருந்து ஏன் வாழ்க்கையை சீரழித்துக்கொள்கிறாய்? பேசாமல் எங்களுடன் வரச் சொன்னால் வரவேண்டியதுதானே?’ என்று கூறினாள். என்னுடைய மனைவி ‘எத்தனைத் தடவை நான் சொல்ல வேண்டும்? என்னால் வர முடியாது என்றால் வரமுடியாதுதான்.’ என்று கோபத்துடன் கத்தினாள். அவளின் அப்பா ‘அதான் ஏனென்று கேட்கிறேன்.’ என்று திருப்பிக் கத்தினார். என்னுடைய மனைவி ‘ஏனென்றால் அவரில்லாமல் என்னால் வாழ முடியாது.’ என்று கூறி பலமாக அழ ஆரம்பித்துவிட்டாள். எனக்கு மூளைத்தொப்பை குறைந்துவிட்டது என்பதை அந்த கணமே நான் உணர்ந்தேன். அவளுடைய அப்பா ‘உன்னையெல்லாம் திருத்தவே முடியாது.’ என்று கூறி அவருடைய மனைவியுடன் வீட்டை விட்டு வெளியேறினார். வெளியில் நின்றிருந்த என்னை பார்த்ததும் அவர்கள் எரிச்சலுடன் முகத்தை திருப்பிக்கொண்டு படிகட்டுகளில் இறங்கினர். நானோ வேகமாக வீட்டினுள்ளே நுழைந்தேன். என்னைப் பார்த்ததும் என் மனைவி அழுகையை நிறுத்தி ஒரு தேவதை, குழந்தையை பார்த்துப் புன்னகைப்பது போல் புன்னகைத்தாள்.

===================================================
புது எழுத்து (ஆடி 2007)

பிறழ்வு

ஜோஸ் அன்றாயின்



நான் என்னிடமிருந்து தொலைவிலிருக்கிறேன். சுற்றியுள்ள உலகம் அதைவிட மிகத் தொலைவிலுள்ளது. சக மனிதர்கள் என்னைப் பார்த்து முறுவலிப்பது கோடிக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து நட்சத்திரங்கள் மின்னுவது போலத் தோன்றுகிறது. ஒருநாள் நான் பக்கத்து மேஜையில் இருக்கும் சக ஊழியரைப் பார்த்து 'எப்படி உங்களால் மிகத் தொலைவிலிருந்து அழகாகச் சிரிக்க முடிகிறது?' என்றேன். அவர் தானும் அதேக் கேள்வியை என்னிடம் கேட்க எண்ணியதாகப் பதிலளித்தார். 'சுயத்திலிருந்து விலகியிருக்கும் ஒருவரால் எப்படி ஒழுங்காக அலுவல்களைச் செய்ய முடியும்?' எனக் கேள்வி எழலாம். ஆனால் ஒரு கணினியின் நேர்த்தியுடன் என்னால் வேலையைச் செய்யமுடியும்.

என்னுடைய மேலாளர் குறிப்பிட்ட கோப்பை கேட்டாரென்றால் சற்றும் யோசிக்காமலேயே ஒரு கண நேரத்தில் அதை அவருக்கு எடுத்துக்கொடுக்க முடியும். நான் தட்டச்சுச் செய்யும் வர்த்தகக் கடிதங்கள், அறிக்கைகளிலும் எந்தத் தவறையும் கண்டுப்பிடிக்க இயலாது. ஆனால் அதிலுள்ள வார்த்தைகள் கணினியைப் போலவே எனக்கும் அர்த்தமற்றவைகளாகத் தோன்றுகின்றன. உண்மையில் நானும் என்னுடைய கணினியும் ஒரே மாதிரிதான் வேலை செய்கிறோம். இதனால் எங்கள் இருவரின் வாழ்வும் பின்னிப்பிணைந்து விட்டன. என் கணினியின் விசைப்பலகையிலுள்ளப் பொத்தான்கள் என் விரல் கணுக்களின் நீட்சியாகவே இருக்கின்றன. நாங்கள் இருவரும் நெருக்கமாக இருப்பதால் என்னுடைய மூளையும் கணினியின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. என் மனதில் ஏற்படும் பிம்பங்களை, என் கணினி தன்னுடைய திரையில் காட்டுகிறான். நான் என் மனதில் நினைப்பவற்றை என் கணினி உள்வாங்குவது போல் என்னுடைய நண்பர்கள் யாரும் உள்வாங்கியதாக எனக்கு நினைவில்லை. எனக்கும் என் கணினிக்கும் இருக்கும் அந்நியோன்யம் காரணமாக என்னால் எந்தத் தவறுகளும் செய்யாமலேயே வேலை செய்ய முடிகிறது. அப்படியே ஏதாவதுப் பிழை இருந்தாலும் ஒரு நல்ல நண்பனை போல என் கணினி அதைச் சுட்டிக்காட்டுவதோடு அதை திருத்துவதற்கான வழிமுறைகளையும் கொடுக்கிறான். நான் என்னுடைய கணினியை மிகவும் நேசிக்கும் காரணமும் இதுதான்.

நான் மிகவும் நேர்த்தியாக வேலை செய்வதால் என்னுடைய மேலாளருக்கு என்மேல் மிகுந்த மதிப்பு உண்டு. ஆனால் என்ன இருந்தாலும் என்னுடைய செயல்பாடுகளில் ஏதோ ஒரு குறைபாடு இருப்பதாக அவர் கருதினார். ஒருநாள் அவர் என்னை அழைத்து 'உங்களிடம் உள்ள பிரச்சினை என்னவென்று கண்டுபிடித்துவிட்டேன். நீங்கள் கணினியைப் போல வேலைகளை எந்த உணர்ச்சியுமில்லாமல் செய்கிறீர்கள். மனிதர்கள் என்றால் உணர்ச்சிகள் வேண்டும். நம்முடைய நிறுவனம் முன்னேற வேண்டுமானால் நாம் எல்லோரும் ஒரே குடும்பத்தின் அங்கத்தினரைப் போலப் பழக வேண்டும். அதற்கு உணர்ச்சிகள் முக்கியம்' என்றார். எனக்குச் சிரிப்பாக வந்தது. நான் அவருக்கு "உணர்ச்சிகளின் சிகரம்" என பட்டப்பெயர் வைத்துவிட்டேன். சக ஊழியர்களும் அந்தப் பெயரை ஆமோதித்தார்கள்.

நானும் சக ஊழியர்களும் எங்களுக்குள் மேலாளரை பட்டப்பெயரிட்டு குறிப்பிடுவது அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். எங்களில் சிலரின் பதவி உயர்வுக்கு ஏற்பாடு செய்திருந்தார் அவர். எங்களைப் போலவே வேலை செய்த கணினிகளுக்குப் பதவி உயர்வு இல்லை. இது எங்களையும் எங்களின் கணினிகளையும் பிரிக்கச் செய்யப்படும் சதி என எனக்குப்பட்டது. பதவி உயர்வு பெற்ற மற்ற சக ஊழியர்களின் முகங்கள் சோகத்துடன் இருப்பதைப் பார்த்தபோது அவர்களும் அவ்வாறுதான் எண்ணியிருக்க வேண்டும் எனத்தோன்றியது. ஆனால் நான் அவர்களைப்போல அமைதியாக இருக்கத் தயாராக இல்லை. என்னுடையப் பணிவிலகல் கடிதத்தை உடனே மேலாளரிடம் கொண்டு கொடுத்துவிட்டேன். அவர் அதிர்ந்து போனார். 'உங்களுடைய ஆத்திரம் எனக்குப் புரிகிறது. உங்களுடைய திறமைக்கு இந்த உயர்வுப் போதாது என்பது எனக்கு தெரியும். நான் மேலதிகாரிகளிடம் சிபாரிசு செய்து இதைவிட நல்லநிலைக்கு ஏற்பாடு செய்கிறேன்.' என்றார். எனக்கு ஆத்திரமும் அழுகையுமாக வந்தது. கோபத்தில் கட்டிடமே அதிரும்படி கத்திவிட்டேன். ஒரு வழியாக மேலாளர் எனக்கு என்னுடையப் பழைய வேலையையே கொடுத்துவிட்டார். நான் சுயநலவாதியல்ல. மற்றவர்களுடைய நலத்தில் அக்கறை கொண்டவன். எனவே என்னுடைய மற்ற சக ஊழியர்கள் தங்களுடைய நல்ல நண்பனாக இருக்கும் கணினியை இழந்து என்ன பாடுபடுவார்கள் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது. இதை மனதில் கொண்டு என்னுடைய சக ஊழியர்களுக்கும் அவரவர்களின் பழைய வேலையையே திருப்பிக் கொடுக்குமாறு எங்களுடைய மேலாளரைக் கேட்டுக்கொண்டேன். அவர் அவர்களுடன் கலந்தாலோசித்து ஒரு முடிவுக்கு வருவதாகக் கூறினார். எனக்கும் அதுச் சரியாகப்பட்டது.

மேலாளர் அறையை விட்டு வந்ததும் என்னுடைய சக ஊழியர்கள் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார்கள். நான் அவர்களுக்காகவும் பரிந்து பேசியதை அவர்கள் எல்லோரும் வெளியிலிருந்து கேட்டிருக்க வேண்டும். எனக்கு என் செயலை குறித்துப் பெருமிதமாக இருந்தது. சந்தோசத்துடன் என்னுடைய நண்பனான என்னுடைய கணினியை தொட்டுப் பார்த்துக்கொண்டேன்.

அன்று எங்கள் நிறுவனத்தை நிறுவியவரின் நினைவு தினம் என்பதால் அரை நாள்தான் வேலை. அதனால் மதியமானதும் வீட்டிற்குப் புறப்பட தயாரானேன். ஒரு சில பதவி உயர்வு பெற்ற ஊழியர்கள் மட்டும் மேலாளரைச் சந்திக்கும் பொருட்டு அலுவலகத்திலேயே அமர்ந்திருந்தார்கள். அவர்கள் என்னைப் போலத் தங்களுக்கும் தங்கள் பழைய வேலையைத் தருமாறு மேலாளரை கேட்கப்போகிறார்கள் என்று எண்ணிக்கொண்டேன். அவர்கள் என்னைப் பின்பற்றுவது எனக்கு மிகுந்த சந்தோசமளித்தது. அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு வெளியே வந்து பேருந்தில் ஏறிக்கொண்டேன். பேருந்திலிருந்து இறங்கி அறைக்குச் செல்லும் வழியில் உணவுப் பொட்டலம் ஒன்றை வாங்கி என்னுடைய அறையை நோக்கி நடந்தேன்.

அறைக்குள் இரவிற்கான இருள் எல்லாம் பதுங்கி இருப்பதாக உணர்ந்தேன். ஜன்னல்களைத் திறக்க அந்த இருள் பகலில் சென்று கரைந்துவிட்டது. பேரிழப்பு ஏற்பட்டதாக உணர மீண்டும் ஜன்னல்களை மூடிக்கொண்டேன். என் மனம் அமைதியை அடைந்தது. ஆனால் என்னைச் சுற்றியுள்ள சிறு உலகத்துக்கு அது பிடிக்கவில்லை போலும். அவைகள் இருளில் என்மீது மோத ஆரம்பித்தன. வேண்டாவெறுப்புடன் ஜன்னல்களை மீண்டும் திறந்தேன். எலி ஒன்று திறந்த ஜன்னல் வழியாக வெளியே ஓடியது. ஓடிப்போன எலியுடன் உலகத்திற்கும் எனக்குமான உறவு முறிந்து போனதாக எனக்குப்பட்டது. என் அறையிலுள்ள என் புத்தகங்களும், செய்திதாள்களும், தொலைகாட்சிப்பெட்டியும் கூட என்னைவிட்டுப் போய்விடுமோ என்றப் பயம் என்னைத் தொற்றிக்கொண்டது. மீண்டும் எழுந்து சென்று ஒரு ஜன்னலை மட்டும் லேசாகத் திறந்திருக்கும்படி செய்துவிட்டு மீதி எல்லா ஜன்னல்களையும் மூடினேன். பயம் நீங்கியது. ஆனாலும், மனமும், வயிறும் வெறுமையாக இருப்பதாக உணர்ந்தேன். வெறுமையிலிருந்து விடுபட ஏதாவது சாப்பிட வேண்டும் போலிருக்க நான் வாங்கிவந்த உணவுப் பொட்டலத்தை பிரித்துச் சாப்பிட ஆரம்பித்தேன். சுவையற்றதாக இருந்த உணவு என்னஎன்றுச் சோதித்துப்பார்க்க, அது தயிர் சாதம் போல தோன்றியது. என் நாக்குக் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டிருப்பதாக எனக்குப்பட்டது. இதைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும். சுவை உணர்ச்சியைத் தூண்ட நல்ல காரத்துடன் கோழிக்கறி சாப்பிட்டால் நன்றாயிருக்கும் என்று தோன்றியது. அதை நினைக்கும் போதே என் நாக்கில் எச்சில் ஊறியது. உடனே எழுந்து கை கழுவிக்கொண்டு நல்ல கோழிக்கறி வாங்குவதற்காகப் புறப்படத் தயாரானேன். அப்போது பல தீயணைப்பு வண்டிகள் பயங்கரச் சத்தத்தை எழுப்பிய வண்ணம் நான் குடியிருக்கும் கட்டிடத்தின் அருகிலிருக்கும் பிரதானச் சாலைக்கு வந்து சேர்ந்தன. வெளியே பயங்கர கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. நான் அறையை விட்டு இறங்கி வெளியே ஓடினேன். எங்கள் பகுதியிலிருந்து சற்று தொலைவில் இருக்கும் கட்டிடங்களில் தீ பயங்கரமாகப் பற்றி எரிந்துக்கொண்டிருந்தது. எங்கும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது. அந்தப் புகை உலகத்தையே இருளாக்கி விடும் போல இருந்தது. தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கத் தீவிரமாகப் போராடிக்கொண்டிருக்க ஆங்காங்கே மக்கள் கூட்டம் கூட்டமாக கூட ஆரம்பித்தனர். நிலவரத்தைத் தெரிந்துக்கொள்ளும் பொருட்டு ஒரு கூட்டத்தை நோக்கிச் சென்றேன். அங்கு ஒருவர் தீ பக்கத்துப் பகுதிகளுக்கும் பரவிக்கொண்டிருப்பதாகவும், பலப்பேர் இறந்திருக்கக் கூடும் எனவும் தன் அருகிலிருப்பவர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தார். எனக்கும் ஏதாவது சொல்ல வேண்டும் என்று தோன்றியது. அதனால் அவரை பார்த்து ' ஏன் எரிகிறது?' என்றேன். அவர் என்னை ஒருவிதமாக பார்த்தார். எனக்கு என்னுடைய தவறு புரிந்தது. நான் செய்ய வேண்டியதை விட்டுவிட்டு தேவையில்லாமல் மற்ற விஷயங்களில் கவனத்தைத் திருப்புவதனால்தான் இப்படி நடக்கிறது. ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டால் அதில்தான் முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும். மனதை ஒருமுகப் படுத்துதல் மிகவும் அவசியம் என எனக்கு தோன்றியது. அதனால் நான் ஏற்கனவே செய்ய நினைத்த விசயத்தைச் செயல்படுத்தும் விதமாக 'இங்கே நல்ல கோழிக்கறி எங்கு கிடைக்கும்?' என்று அவரையேத் திருப்பிக் கேட்டேன். அங்கே இருந்த அனைவரும் என்னை எரிச்சலுடன் பார்த்தார்கள். அவ்வளவு கூச்சலும் குழப்பமும் இருந்த இடத்தில் நான் தனியனாக உணர்ந்தேன். பெரும் பீதி என்னைத் தொற்றிக்கொள்ள உடம்பெல்லாம் வேர்த்து போய்விட்டது. அங்கிருந்த அனைவரும் மிருகங்களை விடக் கொடுமையானவர்களாகத் தோன்றினார்கள். இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமுமிருக்கவில்லை. எனவே அவ்விடமிருந்து மெதுவாக நழுவி அறையை நோக்கி நடந்தேன். நடக்க நடக்க, உருண்டையான உலகம் என்னை விட்டு என் கைகளிலிருந்து உருண்டோடிக் கொண்டிருப்பதாக நான் உணர்ந்தேன்.

நான் அறைக்குத் திரும்பிய போது, என் அறையின் வாசலில் என் பால்ய கால நண்பனொருவன் நின்றுக்கொண்டிருந்தான். நானும் அவனும் சிறு வயதிலிருந்து சேர்ந்தேதான் படித்தோம். பல வருடங்களுக்கு அப்புறம் அவனை அப்போதுதான் பார்த்தேன். அவன், ஆள் மிகவும் மாறிவிட்டிருந்தான். 'என்னை எதிர் பார்க்கவில்லை இல்லியா?' எனச் சிரித்தப்படியே கேட்டான். அவன் எதற்குச் சிரிக்கிறான் என்று எனக்கு புரியவில்லை. 'நான் எதையும் பார்க்கவில்லை' என்று அவனுக்குப் பதிலளித்தேன். அவன் உற்சாகத்துடன் அரசியலைப் பற்றிப்பேச ஆரம்பித்துவிட்டான். இந்தியாவின் முன்னேற்றத்திற்குப் பொதுவுடமை ஆட்சிதான் நல்லதென்றும். இந்தியாவில் பொதுவுடமை சோவியத் யூனியனைப் போல தோல்வியடைய வாய்ப்பில்லை எனவும் கூறினான். நான் மௌனமாயிருந்தேன். என் மௌனத்தைக் கண்ட அவன் எனக்கு அரசியலில் நாட்டம் இல்லை என நினைத்து பேச்சை மாற்றி என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி விசாரித்தான். 'வாழ்க்கையில் உன்னோட லட்சியம் என்ன? எப்பக் கல்யாணம் பண்ணிக்கப்போற?' என்று கேட்டான். நான் பதில் சொல்லமுடியாமல் விழித்தேன். அவன் தொடர்ந்து "காதல், காமம், கல்யாணம் பற்றி உன்னோட கருத்து என்ன?' என்றுக்கேட்டான். எனக்குப் பதிலளிக்க வேண்டும் எனத்தோன்றியது. வெறும் பதிலல்ல. சரியான இடத்தில் சரியான பதில் சொல்ல வேண்டும் என்று என்னுடைய அலுவலக அனுபவம் காட்டியது. அதனால் மிகுந்த கவனத்துடன் 'தேங்க்ஸ்' என்றேன். என்னுடைய நண்பன் என்னை குறித்து ஏமாற்றம் அடைவதாக கூறினான். எனக்கு அவனைப் பார்க்க ஆச்சர்யமாக இருந்தது.

நண்பன் சென்ற பிறகு கட்டிலுக்குச் சென்றுப் படுத்துக்கொண்டேன். தூக்கம் வரவில்லை. எதையோ நான் இழந்துவிட்டது போலத் தோன்றியது. முயற்சிச் செய்து மெல்லக் கண்களைமூட, பல்வித வண்ண நூலிழைகளால் சேலை ஒன்று நெய்யப்படுவதைக் கண்டேன். அச்சேலைக் காற்றில் படபடக்க ஆரம்பித்தது. மெல்லமெல்ல அந்த சேலையில் ஒரு பெண் உருக்கொள்ள ஆரம்பித்தாள். அவளின் ஒளியுள்ள கண்கள் என்னைப் பார்த்து புன்னகைத்தன. அவளின் அழகிய உடல் என்னில் காம கிளர்ச்சியை ஏற்படுத்தின. அவளின் ஸ்பரிசத்தில் என் இறந்து போன ஆன்மா உயிர்க்கொள்ள, கைமதுனம் செய்ய ஆரம்பித்தேன். என்ன நேர்ந்ததென்று தெரியவில்லை, திடீரென அப்பெண் சேலைக்குள்ளிருந்து மறைந்து போனாள். அதிர்ச்சியில் கண்களை திறக்க அந்தச் சேலையும் கூட என் அருகில் இல்லாமல் இருப்பதை உணர்ந்தேன். மீண்டும் என் ஆன்மா வறண்டுப்போயிற்று. என் ஆண்குறி என்னிடமிருந்து மிகத் தொலைவிலிருப்பதாகத் தோன்றியது. வெறுப்பு தோன்ற கைமதுனம் செய்வதை விட்டுவிட்டு ஜன்னலைத் திறந்து வெளியே எட்டிப்பார்த்தேன். சாலையில் மனிதர்களும், வாகனங்களும் பொம்மைகள் போல் சென்றுக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். நான் அந்த உலகிலிருந்து விலகி வேற்று கிரகத்தில் தனியனாக இருப்பதை போல உணர்ந்தேன். அந்தத் தனிமை என்னை மிகவும் அழுத்தியது. சற்று தூங்கினால் தேவலை எனத்தோன்ற மீண்டும் கட்டிலில் போய் படுத்துக்கொண்டேன். கனவும் நனவும் மாறிமாறி வந்து என்னை ஏதோ ஒரு உலகத்துக்கு கொண்டு சென்றது. திடீரென அலாரம் அடித்தது. விடிந்துவிட்டது. தூங்கினேனா? ஆம்/இல்லை. என்னால் தீர்மானகரமாக யோசிக்க முடியவில்லை. இயந்திரக் கதியில் எழுந்துக்கொண்டேன். குளித்து உடைமாற்றித் தொலைக்காட்சிப்பெட்டியை ஆன் செய்ய, அதில் அன்றைய வானிலை அறிக்கை ஓடிக்கொண்டிருந்தது. அன்றைய வெப்பநிலை வெறும் 17 டிகிரிதான் என்பதை அச்செய்தியறிக்கையிலிருந்து தெரிந்துக்கொண்டேன். குளிக்கும் போது நல்ல குளிராக இருந்ததாக இப்போது எனக்குத்தோன்றியது. 'சில இடங்களில் மழைப் பெய்யக்கூடும் எனவும், கடலிலிருந்து மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது எனவும், சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படலாம்' எனவும் அந்த அறிக்கை தொடர்ந்து கூறியது. அந்தச் செய்தியறிக்கை எனக்கு அயர்ச்சி அளிப்பதாகத்தோன்ற தொலைகாட்சிப்பெட்டியை ஆப்ச் செய்துவிட்டேன். மீண்டும் எதையோ இழந்துவிட்டது போன்ற உணர்வு எனக்குள் தலைத்தூக்கியது. இழந்தது என்ன என்று எனக்குப் புரியவில்லை. திடீரென்று அலுவலகத்திலுள்ள என் நண்பனான கணினியின் ஞாபகம் வந்தது. அவனை உடனே பார்த்தாக வேண்டும் என்ற ஆவல் மேலோங்கியது. இப்போது எனக்கு எதையோ இழந்தது போன்ற உணர்வு ஏற்படுவதன் காரணம் புரிந்தது. என்னால் என் நண்பனான கணினியை ஒரு போதும் பிரிந்திருக்க முடியாது. அவனை பார்க்கவேண்டும் என்னும் எண்ணம் என் ஆன்மாவை உந்த, நான் உடனே அலுவலகத்திற்குச் செல்லும் பேருந்தைப் பிடிப்பதற்காக பேருந்து நிறுத்தத்தை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தேன்.
========================================================

புது எழுத்து (ஆடி 2007)